
மேலும் நிலைமை தொடர்பில் விபரிக்கையில், அண்மையில் பளை பிரதேசத்தில் சுவரொட்டிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர்களான கோபி, தேவயென், அப்பன் ஆகியோரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, கைது செய்யப்பட்ட 60 |பேரில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான்கு பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பெண்களில் கோபி மற்றும் அப்பனின் தாயாரும் அடங்குகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசேடமாக எமது தாயகத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று எற்படுவதை தடுப்பதற்கு பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதையும் நோக்காக கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சகல இன மக்களும் இந்நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை விரும்பவில்லை. பயங்கரவாதத்திற்கு புத்துயிரளிப்பதற்கு முயற்சிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.