கடந்த காலத்தில் கலைத்துறைக்கு உன்னதமான சேவையை ஆற்றிய கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக நடத்தப்பட்ட மேற்படி அரச வைபவத்தில் இலங்கை முழுவதும் இருந்து 70 தமிழ் கலைஞர்களுக்கும், 25 முஸ்லிம் கலைஞர்களுக்கும், 206 சிங்கள கலைஞர்களுக்குமாக 301 கலைஞர்கள் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணி ஆற்றி, சிறுகதை, கல்வி, நாட்டார் இலக்கியம், அறிவியல், ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு மற்றும் முகாமைத்துவம், நூலகம், ஊடகத்துறை என 19 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரை களையும், பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து கலை இலக்கியத் துறைக்குச் சேவையாற்றிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ந.அனந்தராஜ் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வல்வை.ந.அனந்தராஜ், ஆனந்தி, ஆனந்தன், அன்ன பூரணன், வல்வை ஆனந்தன் என்ற புனைபெயர்களில் இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வந்த திரு.ந.அனந்தராஜ் அவர்கள் ஒரு முதுமாணிப் பட்டதாரியும், இலங்கை அதிபர் சேவையையும், இலங்கைகல்வி நிர்வாகசேவையையும் சேர்ந்தவருமாவார். வடமாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், உலக வங்கியின் நிபுணத்வ ஆலோசகருமாகக் கடமையாற்றிய இவர் தற்போது, ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும், யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடகத்துறை வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஏற்கனவே இவரது கலைச் சேவையைப் பாராட்டி வல்வை கவிக்குயில்கள் கலா மன்றத்தினர் “அழகிய கண்ணே” விருதினையும், வடமராட்சி வடக்குப் பிரதேச சபை “கலைப் பரிதி” விருதினையும், வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு “முதலமைச்சர்” விருதினையும் வழங்கிக் கௌரவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
![](http://2.bp.blogspot.com/-a-zgnj2a7gI/VnGZvZB9hdI/AAAAAAAApiU/Pp7a_ZreDLM/s640/20151215_173100.jpg)