அச்சுறுத்தல் காரணமாக தலைமறைவாகியிருந்த சகாதேவன் தற்போது வெளியே வந்துள்ளதுடன் டக்களசின் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;
வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல் வாதிகளினால் தான் தோன்றித்தனமாக எவ்வித அனுமதியுமின்றி மண்ணகழ்வில் ஈடுபட்டுவந்தனர்.
இதன் மூலம் சிலர் இலாபமீட்டியிருந்தனர் எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் தற்போது மிக மோசமான முறையில் சூழல் அழிவினை எதிர்நோக்கியுள்ளன.
குறிப்பாக நாகர்கோவில்,மணற்காடு போன்ற இடங்களில் காணப்பட்ட பல நூற்றுக்கணக்கான மண் திட்டுக்கள் காணமல் போயுள்ளன தற்போதும் இந்நிலை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
இவ்வாறு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் தமது மக்களின் வழங்களை தாங்களே சூறையாடிவரும்
நிலையில் இங்கு நிலை கொண்டுள்ள இராணுவமும் எமது வழங்களினை சூறையாடி
வருகின்றது.
தொண்டமானாறு அக்கரையில் தனியார் காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் இவை தொடர்பில் அண்மையில் யாழ் வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களிற்கான பொறுப்பதிகாரியிடம் எமது இயக்கம் தெரியப் படுத்தியிருந்தது.
இது தொடர்பில் இனிவருங்காலங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கவனம் செலுத்தும் என உறுதியளித்துள்ளார் மேலும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் இனியும் தொடர்ந்தால் தம்மிடம் தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளார் .
தற்போது சாதகமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் யாரும் அச்சுறுத்தல்கள் மூலம் மணற்கடத்தல்களில் ஈடுபட முடியாது அவ்வாறு ஈடுபட்டால் அது தொடர்பில் எமக்கு அறிவிக்கவும்.
தகுந்த தண்டனையினை அவர்களுக்கு எம் இயக்கம் பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.